எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி வரவிருப்பதால் வீட்டில் விருந்து வைப்பதற்காக ஏற்பாடுகள் நடந்துக்கொண்டே இருக்கும். விருந்து என்றால் மட்டன் இல்லாமல் எப்படி?
ஆகவே தீபாவளியில் சுவையான கிராமத்து ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்து எப்படி சாப்பிடலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
மட்டன் - 3/4 கிலோ
சின்ன வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 1
தனியாத் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பட்டை - 2
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1 மூடி (துருவியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 10
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் மட்டனை கழுவி தனியாக எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து குக்கரில் மட்டன், மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, 5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வரமிளகாய், கறிவேப்பிலை, சீரகம் மற்றும் மிளகு சேர்த்து வறுத்தெடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
எஞ்சிய எண்ணெய்யில் பாதி வெங்காயத்தை போட்டு வதக்கி இறக்க வேண்டும்.
மற்றொரு பாத்திரத்தில் சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து வறுத்தெடுத்த ஒவ்வொரு பொருட்களையும் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
அடுத்து வதக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு 3-5 நிமிடம் வதக்கிவிட வேண்டும்.
வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வேகவைத்துள்ள மட்டனை ஊற்றி கொதிக்கும் வரை வேக வைக்கவும்.
பின் உப்பு மற்றும் அரைத்து வைத்த பொருட்களை சேர்த்து மீண்டும் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
இறுதியாக அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 5-10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சூப்பரான மட்டன் குழம்பு தயார்!